ஜகார்த்தா, ஜனவரி 4 – இந்தோனேசியா, வடக்கு சுமத்ராவில், யுவதி ஒருவர் பூனையை சிகிரெட் புகைக்க வற்புறுத்தும் காணொளி வைரலாகி கடும் கண்டத்தை பெற்று வருவதை அடுத்து, அதில் சம்பந்தப்பட்ட யுவதி மன்னிப்புக் கோரியுள்ளார்.
18 வயது கொய்ருன்னிசா எனும் அப்பெண் சாலையோரத்தில் அமர்ந்து புகைப் பிடிக்கிறார்.
அப்பொழுது, அவர் அருகில் இருந்த பூனையின் வாயில் சிகிரெட்டை வைத்து அதனை புகைக்க தூண்டுகிறார்.
அந்த பூனை அங்கிருந்து கடந்து செல்லும் முன், அதன் மீது சிகிரெட் புகையை அவர் ஊதித் தள்ளும் காட்சிகள் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.
அந்த காணொளிக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளதை அடுத்து, டெபிங் திங்கி போலீசார், கொய்ருன்னிசா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
கொய்ருன்னிசா தனது அந்த தவற்றை ஒப்புக் கொண்டதோடு, வருந்தி மன்னிப்புக் கோரியதாக போலீசார் தெரிவித்தனர்.
அதோடு, விளையாட்டாக தாம் செய்த அந்த செயலுக்கு மன்னிப்புக் கோரி, கொய்ருன்னிசா தனது சமூக ஊடகத்தில் காணொளி பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.