கோலாலம்பூர், ஜன 8 – ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதின் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் புதிய மேம்பாடுகள் அல்லது புதிய ஆதாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லையென போலீஸ் படைத் துணைத் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான விசாரணை இன்னமும் நடைபெற்று வருகிறது, நாங்கள் விசாரணையை நிறுத்தவில்லையென அவர் கூறினார்.
புதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெற்றால் அதனை நாங்கள் பகிர்ந்துகொள்வோம். இப்போதுவரை புதிய தகவல்கள் எதுவும் இல்லையென இன்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அயோப் கான் தெரிவித்தார். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி காணாமல்போனதாக அறிவிக்கப்பட்ட ஜெய்ன் அவனது வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரத்திலுள்ள நீரோடைக்கு அருகே இறந்து கிடக்க காணப்பட்டான். சவ பரிசோதனையில் அவனது கழுத்து நெறிக்கப்பட்ட காயங்கள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அச்சிறுவனின் மரணம் ஒரு கொலையென போலீசார் தெரிவித்தனர்.