
கோலாலம்பூர், மார்ச் 14 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக அவதூறு அறிக்கையை வெளியிட்டதன் தொடர்பில் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு எதிராக போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் 500-ஆவது விதியின் கீழ் அவதூறு தொடர்பில் அவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக புத்ரா ஜெயா போலீஸ் தலைவர்
Asmadi Abdul Aziz தெரிவித்தார்.
ஜாலான் டூத்தா நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பின் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் ஆற்றியிருந்த உரை குறித்து பிரதமரின் அரசியல் செயலாளர் நேற்று புத்ரா ஜெயா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
முஹிடினின் உரையைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 11 நிமிடம் மற்றும் 11 வினாடிகளைக் கொண்ட அந்த காணொளியில் அன்வாருக்கு எதிரான அவதூறு அம்சங்கள் கொண்டிருப்பதால் 1998 ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 ஆவது விதியின் கீழும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Asmadi தெரிவித்தார்.