கோலாலம்பூர், நவ 17 – கிழக்குக்கரை பருவமழை காலத்தில் நாட்டில் வெள்ளம் ஏற்படக்கூடிய 5,648 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 1,066 இடங்கள் சரவாக்கிலும், 798 இடங்கள் சபாவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது தற்காப்பு படைகளின் தலைமை ஆணையர் அமீனுரஹீம் முகமட் தெரிவித்தார். தீபகற்ப மலேசியாவில் பஹாங்கில் 745 இடங்களும், ஜோகூரில் 745 பகுதிகளும், கிளந்தானில் 617 இடங்களும் பேராவில் 286 இடங்களும் சிலாங்கூரில் 271 இடங்களும் மோசமாக வெள்ளம் ஏற்படும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் கெடா, திரெங்கானு, பினாங்கு, மலாக்கா, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், பெர்லீஸ் மற்றும் லபுவானிலும் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான சில பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமீனுரஹீம் கூறினார். வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.