கோலாலம்பூர், மார்ச் 17 – அல்லாஹ் என்ற வார்த்தையுடன் காலுறைகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சம்பவத்திற்கு பெரும் வருத்தம் தெரிவித்துள்ள KK Mart சூப்பர் மார்க்கெட், அதற்கு பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளது.
அது தெரிந்து செய்த ஒன்றல்ல என KK Mart நிறுவனரும், அக்குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியுமான டத்தோ ஸ்ரீ Dr KK Chai விளக்கமளித்தார்.
“ 23 ஆண்டு கால அவ்வர்த்தகத்தில், நாங்கள் இது போன்ற தவறேதும் இழைத்ததில்லை; அப்படியிருக்க மிகவும் உணர்ச்சிப்பூர்வமான இந்த அல்லாஹ் விஷயத்தில் நிச்சயம் நாங்கள் தெரிந்தே தவறு செய்ய மாட்டோம்” என அவர் சொன்னார்.”
காலுறைகளைத் தருவித்த நிறுவனத்தின் தவறால் இன்று நாங்கள் அவமானப்பட்டு நிற்கிறோம் என KK கோபுரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நடத்திய சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஸ்ரீ KK Chai சொன்னார்.
நாடு முழுவதும் KK Mart கிளைகளில் மேற்கொண்ட சோதனையில், வைரலான Bandar Sunway KK Mart உள்ளிட்ட 3 கிளைகளில் மட்டுமே அதுவும் 14 ஜோடி காலுறைகளில் மட்டுமே அல்லாஹ் வார்த்தை இடம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது; நல்ல வேளையாக அவை விற்கப்படவில்லை என KK Chai சொன்னார்.
எது எப்படி இருந்தாலும், நடந்தது நடந்து விட்டது; கவனக்குறைவுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக உயர் மட்ட அதிகாரிகளுடன் இணைந்து அவர் அறிவித்தார்.
இனி அது போன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்றும் உறுதியளித்த KK Chai, அச்சம்பவத்திற்காக தங்களைப் புறக்கணித்து விட வேண்டாம் என்றும் கண்ணீர் மல்கக் கூறினார்.
தவற்றைச் சரி செய்ய தங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு தரப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
அவ்விவகாரம் மார்ச் 13-ஆம் தேதி வைரலாகி அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr அக்மால் சாலே உள்ளிட்ட தரப்புகள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.