
கோலாலம்பூர், நவம்பர் 2 – ஆடம்பர பொருட்கள் அல்லது விலை உயர்ந்த பொருட்களுக்கான வரி, அடுத்தாண்டு மே முதலாம் தேதி தொடங்கி அமலுக்கு வரும்.
அந்த வரி விதிப்பு மீதான கொள்கை மற்றும் சட்டம் தொடர்பில் முடிவுச் செய்யும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தில் உள்ளதாக, நிதியமைச்சு மக்களவைக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளது.
அதே சமயம், அமலாக்க முறை, வரி விதிக்கப்படவுள்ள பொருட்கள், வரி விகிதம் ஆகியவை குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
அமைச்சரவை அனுமதி வழங்கியவுடன் அது தொடர்பில் நிதியமைச்சு அறிவிக்கும்.
2024 வரவுச் செலவுத் திட்டத்தில், ஆடம்பர அல்லது விலை உயர்ந்த பொருட்களுக்கு ஐந்து முதல் பத்து விழுக்காடு வரையில் வரி விதிக்கப்படுமென அரசாங்கம் அறிவித்திருந்தது.
நகைகள், ஆடம்பர கைக்கடிகாரங்கள் ஆகியவை அதிலடங்கும். எனினும், அந்நிய சுற்றுப்பயணிகளுக்கு அந்த வரி விதிக்கப்படாது.