ஷா ஆலாம், டிசம்பர் 22 – சிலாங்கூரில், இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை மட்டும், 311 பேர் காணாமல் போயிருப்பதாக, அரச மலேசிய போலீஸ் படை புகார்களை பெற்றுள்ளது.
அதில், 161 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், எஞ்சிய 150 பேர் 17 வயதுக்கு கீழ்பட்டவர்கள் என, சிலாங்கூர் மாநில துணைப் போலீஸ் தலைவர் டத்தோ எஸ் சசிகலா தேவி தெரிவித்தார்.
அந்த எண்ணிக்கை, 2022-ஆம் ஆண்டு, சிலாங்கூரில் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட 293 சம்பவங்களை காட்டிலும் அதிகமாகும்.
இவ்வாண்டு, காணாமல் போனவர்களில் 151 பேர் ஆண்கள், 160 பேர் பெண்கள் ஆவர்.
அவர்களில், 82 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பதின்ம வயதினர் அதிகம் காணாமல் போவதற்கு, தனித்து வாழும் சுதந்திர வேட்கையும் காரணமாக இருக்கலாம் என சசிகலா குறிப்பிட்டார்.
அதனை தவிர்த்து, குடும்ப சூழல், கருத்துவேறுபாடு ஆகிய காரணங்களாலும், பதின்ம வயதினர் அதிகம் வீட்டை விட்டு வெளியேறும் சம்பவங்கள் பதிவுச் செய்யப்படுவதை சசிகலா சுட்டிக்காட்டினார்.
பெற்றோரிடம் சொல்லாமல், படிப்பில் ஆர்வமின்றி, காதலர் அல்லது நண்பர்களுடன் சிலர் இளம் வயதில் வேலை தேடிச் செல்லும் சம்பவங்களும் நிகழ்வதை அவர் சுட்டிக் காட்டினார்.