
குஜராத், ஏப்ரல்-3- இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தனது 30-ஆவது பிறந்தநாளை ஒட்டி 140 கிலோ மீட்டர் தூர பாதையாத்திரை தொடங்கியுள்ளார்.
ஏப்ரல் 10-ஆம் தேதி பிறந்தநாள் வருவதால் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரிலிருந்து 5 நாள் நடைப்பயணமாக கிளம்பி, துவாரகா கோயிலில் அவர் தரிசனம் செய்கிறார்.
ஒவ்வொரு நாள் இரவும் 10 முதல் 12 கிலோ மீட்டர் தூரம் வரை பலத்த பாதுகாப்புக்கிடையே அவர் தனது பணியாளர்களுடன் இந்நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பாதயாத்திரையின் போது அவர் செய்த காரியம் வைரலாகி, பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இறைச்சிக்காகக் கோழிகளை ஏற்றிச் சென்ற லாரியை நிறுத்திய அனந்த், கோழிகளை வெட்ட வேண்டாம், நானே வாங்கிக் கொள்கிறேன் என கூறினார்.
கோழி லாரியில் இருந்தவர்களும் அதற்கு ஒப்புக் கொள்ள, 250 கோழிகளை அவர் இரு மடங்கு விலை கொடுத்து வாங்கினார்.
கூண்டிலிருந்த 1 கோழியை அவர் கையில் பிடித்துக் கொண்டு, உடனடியாக அனைத்துக் கோழிகளையும் காப்பாற்றுங்கள்; உரிமையாளரிடம் பணத்தைக் கொடுங்கள் என அவர் கூறும் வீடியோவே வைரலாகியுள்ளது.
மீட்கப்பட்ட 250 கோழிகளும் அனந்தின் வந்தாரா விலங்குகள் காப்பகத்திற்குக் கொண்டுச் செல்லப்படுகின்றன.
விலங்கின ஆர்வலருமான அனந்த், ஜாம் நகரில் 3,500 ஏக்கர் நிலப்பரப்பில் அந்த காப்பகத்தை நடத்தி வருகிறார்.
அங்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் 2,000-க்கும் அதிகமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.