ஈப்போ, ஜனவரி 17 – நான்காண்டுகளுக்கு முன், 1,510.69 கிராம் எடையுள்ள போதைப் பொருளை விநியோகம் செய்தது மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டிலிருந்து, பேராக், ஈப்போ உயர் நீதிமன்றம், விடுவித்து விடுதலை செய்ததை தொடர்ந்து, கணவனும், மனைவியும் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினர்.
48 வயது யோங் ஷின் ஹாவ் மற்றும் 38 வயது பெலிசியா டியோங் செவ் லி ஆகிய இருவருக்கு எதிரான குற்றச்சாட்டை, அரசாங்க தரப்பு வழக்கறிஞர் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறியதால், நீதிபதி அவர்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி, மஞ்சோங், சித்தியவான், கம்போங் செலாமாட்டிலுள்ள, வீடொன்றில், 1,458.3 கிராம் எடையுள்ள மெத்தாம்பேட்டமைன் வகை போதைப் பொருளை விநியோகம் செய்ததாக, மூன்று பெண் பிள்ளைகளுக்கு பெற்றோரான அவர்கள் முதல் குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்தனர்.
அதே நாள், அதே இடத்தில், பல்வேறு வகையான போதைப் பொருட்களை வைத்திருந்ததாக, அவர்களுக்கு எதிராக இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன.
இவ்வேளையில், அதே நாள், அதே இடத்தில், 11.38 கிராம் மெத்தாம்பேட்டமைன் வகை போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக, ஷின் ஹாவுக்கு, ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனையும், மூன்று பிரம்படிகளும் விதித்து இன்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
அவ்வாடவர் கைதான நாளில் இருந்து, அந்த சிறைத் தண்டனை அமலுக்கு வருவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.