கோலாலம்பூர், ஜனவரி 9 – வெளிநாட்டு தொழிலாளர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, நாட்டில் விபச்சார விடுதிகள் அவசியம் இருக்க வேண்டும் எனும் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ள, பிரபல நடிகரும், தொழிலதிபருமான டத்தோ ரோஸ்யம் நோர் கடும் கண்டனத்தை பெற்று வருகிறார்.
நேற்று, டிக் டொக்கில், சுஹான் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட “ஹிதாம் பூத்தே கேஹிடுபான்” (Hitam Putih Kehidupan) எனும் போட்காஸ் தொடர் நிகழ்ச்சின் போது, டத்தோ ரோஸ்யம் நோர் அவ்வாறு கூறியிருந்தார்.
ஆண் அந்நிய தொழிலாளர்கள், தங்கள் மனைவியை பிரிந்து, வாழ்வாதாராத்தை தேடி இங்கு வேலைக்கு வந்துள்ளதாகவும், அவர்களுக்கு விபச்சார விடுதிகள் தேவை எனவும் அவர் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களை உட்படுத்திய கற்பழிப்பு, பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்கவும் அது அவசியம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு மனிதன் தன்னை தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாவிட்டால், அவன் வேறு என்ன செய்ய முடியும்? குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர எனவும் அவர் தற்காத்து பேசியிருந்தது, பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளதோடு, எதிர்மறையான விமர்சனங்களையும் துண்டியுள்ளது.
“நாட்டில் விபச்சார விடுதிகள் செயல்பட அனுமதிப்பது, பாவங்களை சேர்த்துக் கொண்டு நகரத்திற்கு டிக்கெட் புக் செய்வதை போல ஆகிவிடும்” என இணையப் பயனர் ஒருவர் சாடியுள்ள வேளை ;
“அதுபோன்றதொரு சூழல் நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும்” என மற்றொருவர் சினத்தை வெளிப்படுத்தியுள்ளார்.