சிங்கப்பூர், மார்ச் 22 – சிங்கப்பூரில் செயல்படும் மலேசியத் தூதரகம், வருகின்ற மார்ச் 27ஆம் தேதி தொடங்கி, தூதரகச் சேவைகளுக்கு இணையம்வழி முன்பதிவு செய்யும் முறையைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில், ஒரு நாளைக்கு 70 பேருக்கு மட்டுமே தூதரகச் சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில், மலேசியர்கள் பலரும் கவலை தெரிவித்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இந்த இணையம்வழி முன்பதிவு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றுக்கான சான்றிதழ்களைப் பெறுவதற்கு இனி இணையம்வழி முன்பதிவு செய்வது அவசியம்.
குடியுரிமையைக் கைவிடுவோரும், நன்னடத்தைச் சான்றிதழ் மற்றும் ஆவணங்களுக்குச் சான்றளிப்பு பெற விரும்புவோரும் அதேபோல் இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று முகநூலில் இதுகுறித்து மலேசியத் தூதரகம் கடந்த மார்ச் 21 அன்று பதிவிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, சிங்கப்பூரில் 1.13 மில்லியன் மலேசியர்கள் வசிப்பதாக முன்னாள் மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் 2023ல் தெரிவித்திருந்தார்.