குவாலா நெருஸ், பிப்ரவரி 21 – திரங்கானு குவாலா நெருசில் பத்தாண்டுகளாக தனியாக வசித்து வந்த மீன் கடை பணியாளர் ஒருவர் வீட்டில் இறந்து, அழுகிய நிலையில் அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இறந்து சில நாட்களாகி இருக்கலாம் என நம்பப்படும் 51 வயது அவ்வாடவரின் உடல் படுத்துறங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
வீட்டொன்றில் இருந்து அழுகிய துர்நாற்றம் வீசுவதாக நேற்று இரவு 7 மணிக்கு அண்டை வீட்டார் தகவல் கொடுத்ததை அடுத்து, குவாலா திரங்கானு போலிஸ் அங்கு விரைந்ததாக மாவட்ட போலிஸ் இடைக்கால தலைவர் சூப்ரிடெண்டண்ட் வான் முஹமட் சாக்கி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் சந்தேகத்திற்குரிய குற்றவியல் அம்சங்கள் எதுவும் இல்லையென்பதால், அது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வான் சாக்கி கூறினார்.
கண்டெடுக்கப்பட்ட சடலம் சவப்பரிசோதனைக்காகவும், அந்நபர் எப்போது இறந்தார் என்பதை உறுதிச் செய்வதற்காகவும் சுல்தானா நூர் சஹிரா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விசாரணையில், அந்த வீட்டில் பத்தாண்டுகளாக அவர் தனியாக வசித்து வந்தது தெரிய வந்ததாக வான் சாக்கி மேலும் கூறினார்.
கொஞ்ச நாளாகவே வெளியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் கைப்பேசி அழைப்பை அவர் எடுக்கவில்லை; அதோடு தனக்கு காய்ச்சல் கண்டிருப்பதாக தம்பி மகனிடம் கடைசியாக அவர் கூறியிருக்கின்றார்.