கோத்தா கினபாலு, பிப் 22 – கொள்ளை கும்பலுடன் தொடர்புடைய ஆடவன் ஒருவன் ஒவ்வொரு முறை கொள்ளையில் ஈடுபட்ட பிறகு போலீசாரிடமிருந்து தப்பும் நோக்கத்தில் ஹோட்டலில் தங்கியிருக்கும் வழக்கத்தை கொண்டிருந்தான். 38 வயதுடைய அந்த ஆடவன் நேற்றிரவு மணி 8.10 அளவில் கைது செய்யப்பட்டதை சபா குற்றவியல் விசாரணைத்துறையின் உயர் துணை ஆணையர் அஸ்மி அப்துல் ரஹீம் உறுதிப்படுத்தினார். Akut என்ற புனைப்பெயரில் செயல்பட்டுவந்த அந்த சந்தேகப் பேர்வழி சடோங் ஜெயாவில், ஜாலான் டெலிமா Lobby-யில் கைது செய்யப்பட்டான்.
அவனிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொள்ளையடிக்கப்பட்ட கேமராக்கள், காலணிகள், கார் அபாய ஓசை கருவி ஆகியவற்றோடு கொள்ளையின்போது பயன்படுத்தப்படும் முகமூடிகள், பூட்டை உடைக்க பயன்படுத்தம் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக இருந்துவரும் மூவருடன் சேர்ந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததை அந்த ஆடவன் ஒப்புக்கொண்டதாக அஸ்மி தெரிவித்தார்.