கோலாலம்பூர், டிச 1 – பாலியல் புகார் தொடர்பாக அமலாக்க நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ஒருவர் சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கை இன்று சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஐந்து சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உசேன் தெரிவித்திருக்கிறார். புகார்தாரரிடமும் வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்க நிறுவனத்தின் தலைமை இயக்குனரான சந்தேகப் பேர்வழி மற்றும் அவரது சிறப்பு அதிகாரியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ரஸாருதீன் கூறினார்.
வியாழக்கிழமையன்று அந்த சந்தேகப் பேர்வழியிடம் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குனர் கமிஷனர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் நவம்பர் 24 ஆம் தேதி கூறியிருந்தார். விசாரணைக்கு உதவும்பொருட்டு சந்தேகப் பேர்வழியின் கைதொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.