கோலாலம்பூர், பிப் 5 – கோலாலம்பூர் போலீசார் இரவு நேர உல்லாச விடுதிகளில் நடத்திய சோதனையில் விருந்தினர் பொது உறவு அதிகாரிகளாக பணியாற்றி வந்த 24 பெண்கள் உட்பட 30 தனிப்பட்ட நபர்களை கைது செய்தனர். கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத்துறையின் சூதாட்டம் மற்றும் ரகசியச் சங்கங்கள் பிரிவான (டி7) அதிகாரிகள் சனிக்கிழமை இரவு 11.30 மணி முதல் “OPS Noda” என்ற அந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஜாலான் கம்போங் பண்டானில் செயல்பட்டு வந்த இரவு விடுதியிலும், செராஸ் தாமான் மிஹர்ஜாவில் உள்ள மற்றொரு இரவு விடுதியிலும் அந்த சோதனை நடத்தப்பட்டது. 20 முதல் 41 வயதுடைய 26 வெளிநாட்டவர்கள் உட்பட 30 தனிப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.
இரவு விடுதிகளைச் சேர்ந்த உள்நாட்டைச் சேர்ந்த நான்கு நிர்வாகிகள், மற்றும் 26 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 24 வெளிநாட்டு பெண்களில் 10 இந்தோனேசியர்கள், ஏழு வியட்னாமியர்கள், சீனாவைச் சேர்ந்த மூவர், மூன்று தாய்லாந்து பெண்கள் மற்றும் லாவோசை சேர்ந்த பெண் ஒருவரும் அடங்குவார். சோதனை நடத்தப்பட்ட நான்கு மையங்களில் இரண்டு அனுமதியின்றி செயல்பட்டதாகவும் விசாரணையில் தெரியவருவதாக அலாவுடின் தெரிவித்தார்.