
ஜோர்ஜ் டவுன் , ஏப் 30 – திங்கட்கிழமை முதல் பினாங்கில் பதிவான மூன்றாவது மோசடி இதுவாகும். திங்கட்கிழமை, ஒரு தனியார் நிறுவனத்தின் 70 வயதான கணக்கியல் மேலாளர் ஆன்லைன் முதலீட்டு மோசடியில் 1.365 மில்லியன் ரிங்கிட் இழந்த பின்னர் போலீசில் புகார் செய்தார்.
அதே நாளில், 62 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் இல்லாத முதலீட்டு மோசடியில் சிக்கி 229,800 ரிங்கிட் ஏமாந்தார்.இந்த வாரம் மட்டும் பினாங்கு மாநிலத்தில் மூன்று ஆன்லைன் மோசடிகள் நடந்துள்ளன. ஆகக்கடைசியாக இத்தகைய மோசடியில் பாதிக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை மேற்பார்வையாளர் 558,000 ரிங்கிட் இழந்துள்ளார்.
இது தொடர்பாக 57 வயது நபரிடமிருந்து பினாங்கு தென்மேற்கு வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறைக்கு புகார் கிடைத்திருப்பதாக மாநில போலீஸ் தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார்.
“AI முதலீடு” என்ற சுயவிவரப் பெயரில் முகநூல் வழியாக சீனாவிலிருந்து நிறுவனப் பங்குகளை வாங்குவது தொடர்பான ஆன்லைன் முதலீட்டு மோசடியில் அந்த நபர் பாதிக்கப்பட்டாக ஹம்சா கூறினார். இந்த விவகாரம் குறித்து தற்போது தண்டனைச் சட்டத்தின் 420 இன் பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட நபர் 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 29 முறை பணப் பட்டுவாடா செய்துள்ளார். ஏப்ரல் 24 முதல் 25 ஆம்தேதிவரை பாதிக்கப்பட்டவரின் கணக்கிற்கு 1.2 மில்லியன் ரிங்கிட் லாபத்தை மாற்றுவதாக சந்தேக நபர் உறுதியளித்திருந்தார்.
ஆனால் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி பணம் எதுவும் வரவில்லை என்று உணர்ந்ததைத் தொடர்ந்து அந்த மேற்பார்வையாளர் தாம் மொத்தம் 558,000 ரிங்கிட் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் செய்தார் என ஹம்சா கூறினார்.