நெல்லை, டிச 19 – வெள்ளப் பேரிடரால் தற்போது தமிழ்நாட்டின் பல பாகங்கள் தண்ணீரில் மிதந்து வரும் நிலையில், பெரும்பாலோரின் தினசரி வாழ்க்கை பாதிப்புற்றுள்ளதை மறுப்பதற்கில்லை.
அதே சமயத்தில், எதிர்பாரா விதமாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை ஏதோ ஒர் இயற்கை பேரிடர் தாக்கி வருவதால், அதற்கென்று நமது இயல்பு வாழ்க்கையை, சந்தோஷத்தை இழக்க முடியுமா என சொல்வதுபோல, தம்பதி ஒருவர் தங்களின் வளைகாப்பு விழாவை வெள்ளத்தின் மத்தியில் நடத்திய காணொளி வைரலாகி வருகிறது. இது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
அந்தக் காணொளியில், நிகழ்ச்சி நடக்கும் இடம் முழுவது முழங்கால் அளவு தண்ணீர் சூழ்ந்திருக்க, சம்பந்தப்பட்ட தம்பதியர் தங்களுக்கு பிறக்கப் போவது ஆண் பிள்ளையா பெண் பிள்ளையா என யூகிப்பது போல போட்டோக்ராபருக்கு போஸ் கொடுக்க, அதனை புகைப்படக் கலைஞரும் வெள்ளத்தின் நடுவே நின்றுக் கொண்டு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கமோ, குடும்ப உறுப்பினர்கள், மண்டபத்தின் மேடையில் அமர்ந்திருக்கின்றனர்.
இதை நகைச்சுவையாக பார்த்து, அந்த தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.