பேங்கோக், மார்ச் 22 – தன்னை ஏமாற்றிய கணவனையும், அவரது கள்ளக் காதலியையும் கத்தியால் குத்தி கொலை செய்ய, தாய்லாந்து பெண் ஒருவர் தைவானிலிருந்து தாயகம் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று பிள்ளைகளுக்கு தாயான அப்பெண், கடல் கடந்து தைவானில் பணிப்புரியும் வேளை ; அவரது கணவர் தாய்லாந்து Roi Et மாவட்டத்தில், பொருள் விநியோகிப்பாளராக வேலை செய்கிறார்.
கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது குறித்து நண்பர்கள் மூலம் அறிந்து கொண்ட அப்பெண் கொதித்து போனார்.
கணவனை கையும் களவுமாக பிடிக்க, இம்மாதம் 20-ஆம் தேதி, விமானம் வாயிலாக நாடு திரும்பிய அவர், விமான நிலையத்திலிருந்து நேரடியாக, கணவனும் அவரது கள்ளக் காதலியும் தங்கி இருந்த தங்கும் விடுதி அறைக்கு சென்று அவர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு நேரப்படி, அதே நாள் அதிகாலை மணி மூன்று வாக்கில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு பலத்த காயங்களுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆடவன் ஒருவனையும், பெண் ஒருவரையும் மீட்டனர்.
அதோடு, சம்பவ இடத்தில் அழுதுக் கொண்டிருந்த, அவர்களை குத்தி காயப்படுத்திய பெண்ணையும் கைதுச் செய்தனர்.
இந்நிலையில், அச்சம்பவம் தொடர்பான செய்தியின் கருத்துப் பகுதியில், இணையவாசிகள் பலர் தொடர்ந்து அப்பெண்ணுக்கு ஆதரவாக ஊக்க வார்த்தைகளை பதிவிட்டு வருகின்றனர்.