ஈப்போ, டிச 6 – டெலிகாம் மலேசியா நிறுவனத்தின் சின்னம் கொண்ட சட்டை அணிந்திருந்த நிலையில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான TM கார்டுகளை திருட முயன்ற இரண்டு ஆடவர்களின் முயற்சியை போலீசார் முறியடித்தனர்.
தஞ்சோங் மாலிமில், ஸ்லீம் ரிவேரில் எண்ணெய் நிலையத்திற்கு அருகே அந்த இரண்டு ஆடவர்களும் டெலிகாம் கார்டு முறையை திறக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டதாக முவாலீம் போலீஸ் நிலையத்தின் தலைவர் முகமட் ஹஸ்னி முகமட் நசீர் தெரிவித்திருக்கிறார். குற்றச் செயல்களை துடைத்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ரோந்து வாகனப் பிரிவின் போலீஸ்காரர்கள் அவர்களை கைது செய்தனர்.
போலீஸ்காரர்களை கண்டதும் அந்த சந்தேகப் பேர்வழிகள் ஹோண்டா அக்கார்டு காரில் தப்பியோடினர். போலி பதிவு எண்பட்டை கொண்ட அந்த காரை போலீஸ் ரோந்து கார் தடுத்து நிறுத்தியது. அந்த காரிலிருந்து 21 யூனிட் டெலிகாம் கார்டுகள், TM சின்னத்தை கொண்ட இரண்டு சட்டைகள் மற்றும் இரண்டு பாதுகாப்பு தொப்பிகளையும் பறிமுதல் செய்தனர். 37 மற்றும் 42 வயதுடைய அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் ஷா ஆலாம் மற்றும் பெட்டாலிங் ஜெயாவை சேர்ந்த அந்த இருவரை கைது செய்ததன் மூலம் 350,530 ரிங்கிட் இழப்பு சம்பந்தப்பட்ட TM கார்டுகள் திருட்டு விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டதாக முகமது ஹஸ்னி தெரிவித்தார்.