கெமாமான், பிப்ரவரி-23, தம்மிடம் சிகிச்சைப் பெற வந்த 6 சிறுவர்களை ஆபாசமாக புகைப்படமெடுத்ததாக பஹாங், குவாந்தானில் உள்ள அரசாங்க மருத்துவமனையொன்றின் மருத்துவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும், தம் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து, 32 வயது அம்மருத்துவர் விசாரணைக் கோரினார்.
முன்பு திரங்கானு கெமாமான் மருத்துவமனையில் பணிபுரிந்த போது, சிகிச்சை அறையில் வைத்து 7 முதல் 11 வயது வரையிலான சிறார்களை ஆபாசமாக படமெடுத்ததாக அவர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன
.
2022 டிசம்பர் மற்றும் 2023 பிப்ரவரி இடையிலான காலக்கட்டத்தில் வெவ்வேறு சமயங்களில் அதே சிகிச்சை அறையில் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதே சிகிச்சை அறையில் தவறான நோக்கத்தில் 12 வயது சிறுமியின் மார்பகங்களைத் தொட்டதாக மற்றொரு குற்றச்சாட்டையும் அம்மருத்துவர் எதிர்நோக்கியுள்ளார்.
இதைத் தவிர்த்து, கைப்பேசியில் ஆபாச படங்களை வைத்திருந்ததாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்னொரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது.
அவரை ஜாமீனீல் விடுவித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பிள்ளைகளையோ அரசு தரப்பின் சாட்சிகளையோ வழக்கு முடியும் வரை நெருங்கவோ, அவர்களுக்குத் தொல்லைக் கொடுக்கவோ கூடாது என்றும் கூடுதல் நிபந்தனையை விதித்தார்.