கங்கார், டிச 2 – கைப்பேசி மோசடிக்கு உள்ளான பெர்லிஸ், அராவ்வில் உள்ள பொதுப்பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தன் வங்கிக் கணக்கில் இருந்த 38,000 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
தன்னை ஒரு போலிஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட ஆடவன் ஒருவன், போதைப்பொருள் தொடர்பான பணம் தொடர்பில் அம்மாணவனை விசாரிக்கப்போவதாக மிரட்டியுள்ளான். ஒத்துழைப்பு நல்க மறுத்தால், போலிசாரால் பிடிபடுவான் என்றும் கூறியுள்ளான். பின்னர், பணத்தின் நம்பகத்தன்மையை அறிய, அதனை இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றும்படியும் உத்திரவிட்டுள்ளான்.
பயத்தில் அனைத்து பணத்தையும் மாற்றியப் பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்மாணவர் போலிசில் தகவல் தெரிவித்ததாக கங்கார் மாவட்ட போலிஸ் தலைவர் Yusharifuddin Mohd Yusop தெரிவித்தார்.
இதனிடையே, எந்த ஒரு போலிஸ் அதிகாரியும், எந்த வழக்குத் தொடர்பிலும் பொதுமக்களிடம் பணத்தை வங்கிக் கணக்குகளில் சேர்க்கும்படி கேட்கமாட்டார்கள். எனவே பொதுமக்கள் இதுபோன்ற கைப்பேசி மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக இருக்கும்படி அவர் எச்சரித்தார்.