கோலாலம்பூர், மார்ச் 22- டோல் கட்டண முறையை ரத்து செய்வது நாட்டின் நிதி நிலைமையில் கணிசமான பாதிப்பு ஏற்படும் என்பதால் அத்திட்டத்தை அமல்படுத்துவது கடினமான ஒன்று என பொதுப்பணித் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ Ahmad Maslan தெரிவித்திருக்கிறார். நாட்டில் டோல் கட்டண முறையை ரத்து செய்யும் பரிந்துரையை அமல் செய்யும் பட்சத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுக்கு 450 பில்லியன் ரிங்கிட்வரை இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்படும் என்று அவர் கூறினார். டோல் கட்டண முறையை ரத்து செய்யும் பட்சத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுக்கு 400 பில்லியன் ரிங்கிட்வரை இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 2019ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்டது என்று Ahmad Maslan கூறினார். தற்போது இந்த இழப்பீட்டின் மதிப்பு இன்னும் உயர்ந்து 450 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்திருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் வரவு செலவுத் திட்டம் ஆண்டிற்கு 388 பில்லியன் ரிங்கிட்டை உள்ளடக்கியுள்ளது. அப்படி இருக்கையில் 450 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான டோல் கட்டண முறையை ஓராண்டு காலத்தில் நாம் ரத்து செய்தால் சம்பளம் வழங்குவதற்கும் இதர தேவைகளுக்கும் செலவிட நம்மிடம் பணம் இருக்காது. ஆகவே, டோல் கட்டணம் ரத்து செய்யப்படும் என தாம் கருதவில்லை என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பெருநாள் காலங்களில் இலவச டோல் கட்டணச் சலுகையை வழங்கும் நடைமுறை காரணமாக அரசாங்கம் நாளொன்றுக்கு 20 மில்லியன் ரிங்கிட்டை நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்குகிறது என்றத் தகவலையும் Ahmad Maslan வெளியிட்டார்.