கோலாலம்பூர், நவம்பர் 20 – பங்சாரில், அடை மழை காரணமாக, வேரோடு பெயர்ந்து விழுந்த மரம் ஒன்றை, அருகிலுள்ள, “நாசி கண்டார்” உணவக பணியாளர்கள் சிலர் அகற்றிய சம்பவம், இணையவாசிகளின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அச்சம்பவம் தொடர்பான 24 வினாடி காணொளியை, @salim.hanafiah என்பவர் தனது டிக் டொக்கில் பதிவிட்டதை தொடர்ந்து வைரலாகியுள்ளது.
உணவக சீருடையை அணிந்திருக்கும் நான்கு பணியாளர்கள், சாலையில் விழுந்து கிடக்கும் மரத்தை தூக்கி அப்புறப்படுத்தும் காட்சிகள் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
அடை மழை பெய்ந்து கொண்டிருந்த சமயத்தில், சொந்த பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் புறம் தள்ளி அவர்கள் புரிந்த அந்த செயல், பலரது கவனத்தை பெற்று பாராட்டுகளை குவித்து வருகிறது.
“அந்நிய தொழிலாளர்களை நம்மில் பலர் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை, எனினும், ஆபத்து அவசர சமயங்களில் நமக்கு உதவ அவர்கள் ஒருபோதும் தவறுவதில்லை” என இணைய பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளியை இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள வேளை ; ஐயாயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை அது குவித்துள்ளது.