கோலாலம்பூர், ஜனவரி 18 – இம்மாதம் நான்காம் தேதி, தனது வாகனத்திற்கு, MBSJ – சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் அபராதம் விதித்ததை, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த அபராத அறிக்கையை தனது X சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்துள்ள அமிருடின், சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட அந்த 80 ரிங்கிட் அபராதத்தை, தாம் செலுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“திடீரென போக்குவரத்து அபராதம் குறித்து @SJcitycouncil இடமிருந்து குறுஞ்செய்தி கிடைத்தது. எனினும், அந்த இணைப்பை கிளிக் செய்த ஐந்து நிமிடங்களில், கட்டணத்தை செலுத்த முடிந்தது” என அமிருடின் பதிவிட்டுள்ளார்.
2019-ஆம் ஆண்டு முதல், ஏறக்குறைய அனைத்து ஊராட்சிமன்றங்களும், “ஸ்மார்ட் பார்க்கிங்” முறையையும், “ஆன்லைன்” கட்டண முறையையும் அமல்படுத்தி வருகின்றன எனவும் அமிருடின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், போக்குவரத்து குற்றங்கள் தொடர்பான அபராதங்களை உடனடியாக செலுத்திவிடுமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.