தோக்யோ, ஜன 3- ஜப்பான் ஏர்லைன்ஸ்சின் விமானம் ஒன்று 367 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் தோக்கியோ ஹனேடா விமான நிலையத்தின் ஓடு பாதையில் தரையிறங்கி வேகக்தை குறைத்துக் கொண்டே வந்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோர காவல்படையின் சிறு விமானத்தில் மோதியபோது அந்த விமானத்தில் இருந்த அறுவரில் ஐவர் மரணம் அடைந்ததை ஜப்பான் போக்குவர்த்து அமைச்சர் டெட்சசோ சைட்டோ உறுதிப்படுத்தினார்.
அந்த கடலோர ரோந்து விமானத்தின் கேப்டன் காயம் அடைந்தார். புத்தாண்டு தினத்தில் ஜப்பானில் நிகழ்ந்த வலுவான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி பொருள் கொண்டுச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் ஜப்பானின் மேற்குக்கரையிலுள்ள நீகாடா விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு தயாராய் இருந்தபோது அந்த மோதல் சம்பவம் ஏற்பட்டதாக கடலோர காவல் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே பயணிகள் விமானம் தீப்பற்றிய நிலையில் அவசரகால பலூன் வழியே அவசர அவசரமாக இறக்கப்பட்ட பயணிகளில் 17 பேர் காயம் அடைந்ததாக ஜப்பானின் NHK தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்தது. பயணிகள் விமானத்தில் மீட்கப்பட்ட பயணிகளில் எட்டு சிறுவர்களும் அடங்குவர்.