கோலாலம்பூர், பிப் 1 – அரசாங்கத்தில் இருந்தபோது கலை நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என பாஸ் கட்சி முரட்டுத்தனமான கோரிக்கை எதனையும் எழுப்பவில்லையென முன்னாள் அமைச்சரும், அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவருமான கைரி ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார். கலை நிகழ்ச்சிகளுக்கு பாஸ் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அக்கட்சி அரசாங்கத்தில் இருந்தபோது ஒரு முறை மட்டுமே கலைநிகழ்சிக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்தது. கோவிட் 19 தொற்றுக்கு பிறகு பொருளாதார நடவடிக்கைகளை அரசாங்கம் மீண்டும் திறந்துவிட்டபோது இது குறித்து பாஸ் கேள்வி எழுப்பியதாக டான்ஸ்ரீ முஹிடின் மற்றும் இஸ்மாயில் சப்ரி நிர்வாகத்தில் அமைச்சராக இருந்துள்ள கைரி சுட்டிக்காட்டினார்.
அப்போது சமய விவகார அமைச்சராக இருந்த இட்ரிஸ் அகமாட் கலை நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியுமா என்று மட்டுமே வினவியிருந்தார். கலைநிகழ்ச்சி வேண்டாம் என்று கூறுவார் என தாம் நினைத்ததாகவும் ஆனால் கலைநிகழ்ச்சிகளின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் என்று மட்டுமே அவர் கூறியிருந்ததாக கைரி தெரிவித்தார். அரசியல், கொள்கைகள் மற்றும் கைரி ஜமாலுடினுடன் தனிப்பட்ட பயணம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.