
கோலாலம்பூர், மார்ச்-6 – இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான சமூக ஊடகப் பதிவு குறித்து, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான JAKIM, மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC-யிடம் புகார் செய்துள்ளது.
சம்பந்தப்பட்டவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட ஏதுவாக போலீஸிலும் புகார் செய்திருப்பதாக, JAKIM தலைமை இயக்குநர் Datuk Dr Sirajuddin Suhaimee கூறினார்.
அப்பதிவு, அப்பட்டமாக இஸ்லாத்தை அவமதிப்பதோடு, சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கவல்லது.
JAKIM அதனைக் கடுமையாகக் கருதுவதால், அவ்விஷயத்தில் சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
இந்துக்களை இழிவுப்படுத்தி சர்ச்சைக்குரிய வீடியோவைப் பதிவேற்றிய ஏரா எஃ.எம். வானொலியின் 3 அறிவிப்பாளர்களின் செயலை JAKIM சாடிய மறுநாள், இச்சம்பவம் நடந்துள்ளது.
பல்லின மக்கள் தங்களுக்கிடையில் பரஸ்பர மரியாதையை பரிமாறிக் கொள்ள வேண்டும்.
அதுவும் இந்த புனித இரமலான் மாதத்தில் மற்றவர் மனம் புண்படும்படியான காரியத்தில் ஈடுபடக் கூடாதென Sirajuddin கேட்டுக் கொண்டார்.