பத்து பஹாட், நவம்பர் 6 – இரு மடங்கு கூடுதல் இலாபம் ஈட்ட வேண்டும் என எண்ணிய, பணி ஓய்வுப் பெற்ற பெண் ஒருவரின் எண்ணம் ஈடேறாமல் போனதோடு, இல்லாத முதலீட்டு திட்டத்தை நம்பி, அவர் கிட்டதட்ட மூன்று லட்சம் ரிங்கிட்டை பறிகொடுத்தார்.
நல்ல லாபம் கிடைக்குமென, முகநூல் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக அறிமுகமான ஆடவன் ஒருவன் கூறியதை நம்பி, அந்த 62 வயது மூதாட்டி, பணத்தை பறிகொடுத்தாக, பத்து பஹாட் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் இஸ்மாயில் டொல்லா தெரிவித்தார்.
முதலீட்டு பதிவு நடவடிக்கைக்காக, வங்கி கணக்கு எண் உட்பட சுய விவரங்களை அந்த பெண் ஒப்படைத்துள்ளார்.
அதன் பின்னர், கொஞ்சமும் சந்தேகம் இன்றி, ஏழு வெவ்வேறு வங்கி கணக்குகளில், க அவர் கட்டங் கட்டமாக, 35 ஆயிரத்து 200 ரிங்கிடை செலுத்தியுள்ளார்.
அதன் பின்னர், இலாபம் ஈட்ட வேண்டுமானால், முதலில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 417 ரிங்கிட்டை அவர் செலுத்த வேண்டுமெனவும், கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
மீண்டும், அந்நிய செலவாணிக்காக 99 ஆயிரத்து 636 ரிங்கிட்டை செலுத்திய அப்பெண், அதன் பின்னர் உறுதியளிக்கப்பட்டதை போல இலாபம் வழங்கப்படாததால், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
அந்த மோசடி தொடர்பில், குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.