
கோலாலம்பூர், மார்ச் 9 – உடல் மாறிப் போன விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் செலவு செய்த 20,000 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்குவதற்கு உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail முன்வந்தார். இந்த தொகை இன்று அல்லது நாளை அந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சிறையில் உள்ள தங்களது மகன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட தவறான தகவலால் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதற்கான இறுதி சடங்குகளை ஏற்பாடு செய்வதற்கு செலவு செய்துள்ளனர். சடலத்தை தகனம் செய்வதற்கான இறுதி ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இறந்துபோனது தங்களது மகன் இல்லையென தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த சடலத்தை சிறைச்சாலைத்துறையினர் எடுத்துச் சென்றனர்.
இறுதிச் சடங்கிற்காக சுமார் 20 ,000 ரிங்கிட்வரை செலவு செய்த அந்த குடும்பத்திற்கு உள்துறை அமைச்சு இழப்பீடு வழங்க முன்வருமா என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் . குலசேகரன் வினவியிருந்தார். இதற்கு பதில் அளித்த Saifuddin அந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டதோடு அவர்களுக்கு 20,000 ரிங்கிட் தொகையை தாம் இழப்பீடாக வழங்க முன்வருதாக தெரிவித்தார்.