ரெம்பாவ், ஜனவரி 16 – அரச மலேசிய போலீஸ் படையின் ரோந்து காரை மோதித் தள்ளிய குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆடவன் ஒருவனுக்கு, நெகிரி செம்பிலான், ரெம்பாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மலாக்கா, தஞ்சோங் கிலிங்கை சேர்ந்த 26 வயது இஸ்மாயில் அப்துல் ரஹ்மான், நீதிமன்றத்தில் இன்று தமக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அதனை ஒப்புக் கொண்டான்.
இரு போலீஸ் அதிகாரிகள் பயணித்த ரோந்து காரை மோதித் தள்ளியதன் வாயிலாக, அவர்களின் பணிக்கு அவ்வாடவன் இடையூறை ஏற்படுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்தான்.
இம்மாதம் ஏழாம் தேதி, காலை மணி 11.30 வாக்கில், கோத்தா, கம்போங் ரெலோங் பள்ளி வாசலுக்கு முன்புறம் அவன் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.
அதனால், அவ்வாடவனுக்கு கூடுதலாக ஈராயிரம் ரிங்கிட் அபராதத்தையும் நீதிமன்றம் விதித்தது. அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில், அவன் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
முன்னதாக, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரு போலீஸ் அதிகாரிகள், அவ்வாடவன் ஓட்டிச் என்ற புரோட்டோன் வீரா ரக காரை சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு பணித்துள்ளனர்.
எனினும், அதனை பொருட்படுத்தாமல், முட்டுச்சந்தில் காரை செலுத்திய அவ்வாடவன், பின்னர் வேறு வழியின்றி வந்த வழியே அங்கிருந்து வெளியேற முயன்ற போது, வழிமறித்து நின்ற போலீஸ் ரோந்து காரை மோதித் தள்ளியது குறிப்பிடத்தக்கது.