Latestமலேசியா

உணவகத்தில் கொதிக்க கொதிக்க சுடு நீர் கொட்டி சிறுவன் படுகாயம்; நீதி கேட்கும் குடும்பத்தார்

புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல்-30 – பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், jalan machang bubokகில் இரவு உணவுண்ண சென்ற ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி, பெரும் துன்பத்தில் முடிந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி Honey368 உணவகத்தில் சித்தார்த்தன் சசிபாலன் எனும் 9 வயது சிறுவன் மீது, உணவகப் பணியாளரான சீன ஆடவர் கொதி நீரை கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

இதனால் அச்சிறுவனின் முகம், கழுத்து மற்றும் உடலில் மோசமான தீப்புண் காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அச்சிறுவன், காயங்கள் மிகவும் மோசமாக இருந்ததால், பின்னர் உடனடி தோல் அறுவை சிகிச்சைக்காக பினாங்கு பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான்.

இதனிடையே, “இது ஒரு விபத்தல்ல; கடுமையான கவனக்குறைவாகும்; தேவையில்லாமல் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அப்பாவி சிறுவன் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறான்.

இது போல் பெற்றப் பிள்ளைப் படும் கஷ்டத்தை எந்தவொரு பெற்றோரும் அனுபவிக்கக் கூடாது.
தங்கள் பிள்ளைக்கு நேர்ந்த துன்பத்திற்கு நீதி வேண்டும்”என சித்தார்த்தின் பெற்றோரும் குடும்பத்தாரும் வலியுறுத்தியுள்ளனர்.

அச்சம்பவத்துக்குக் காரணமானவர் மீது விரைந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களும் இச்செய்தியைப் பகிர்ந்து தங்களுடன் துணை நிற்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் தகவலறிந்த செனட்டர் Dr லிங்கேஷ்வரன் பினாங்கு மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறையில் சித்தார்த்தை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அச்சிறுவனின் தாயார் பத்தாண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்; தந்தையோ நாளொன்றுக்கு வெறும் 150 ரிங்கிட் சம்பளத்தில் லாரி ஓட்டுநராக வேலை செய்கிறார்.

மருத்துவமனையில் மகனைப் பார்த்துக் கொள்வதற்காக 10 நாட்களாக வேலைக்கும் போகவில்லை.இதனால் அக்குடும்பம் மேலும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இதை கருத்தில் கொண்டு சித்தார்த் தந்தையின் 10 நாள் சம்பளமான 1,500 ரிங்கிட் நிதி உதவியையும் லிங்கேஷ் வழங்கினார்.

அச்சிறுவன் விரைந்து குணமடைந்து வர வேண்டுமென்றும் லிங்கேஷ் பிராத்தித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!