பினாங்கு, டிச 22 – மலேசியாவின் முதல் Drive-thru இந்திய உணவகம் என்ற பெருமையுடன் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது கார சாரம் உணவகம்.
மலேசியாவில் சட்டி சோறுக்குப் பிரபலமான கார சாரம் உணவகத்தின் 15வது கிளையின் திறப்பு விழா நேற்று பினாங்கில் நடைப்பெற்றது. அதில் துரித உணவுப் போன்று வாகனத்திலிருந்தே உணவை வாங்கும் வசதியான Drive-thru சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது அவ்வுணவகம்.
ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் ம.இ.கா தேசியத் துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ சரவணன் ஆகியோர் இணைந்து அவ்வுணவக கிளையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.
2020ஆம் ஆண்டில் மலேசிய உணவு வணிகத்தில் கால் பதித்த கார சாரம் உணவகம் வெற்றிகரமாக 15வது கிளையை திறந்திருப்பது பெருமையளிக்கிறது. இந்தியர்கள் பலர் வர்த்தக துறையில் ஈடுபட்டு பெரிய அளவில் வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்பட்டுத்தினார் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்.
கார சாராம் உணவகத்தை சிறிதளவில் தொடங்கிய ஸ்ரீதரன் எனும் இளைஞர் ஒருவர் இப்போது 15ஆவது கிளையையும் திறந்து, அதனை சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வைத்திருப்பது ஒரு பெருமைக்குரிய விஷயம் என குறிப்பிட்டார் டத்தோ ஸ்ரீ சரவணன்.
உணவுக்கு பெயர் போன மலேசியாவில், ஓர் இந்திய உணவகம் குறுகிய காலக்கட்டத்தில் உச்சத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. உணவின் சுவையையும் அதன் தரத்தையும் அப்படியே பராமரித்து கூடுதலாக , வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அதனை பூர்த்தி செய்யும் நுணுக்கத்தை அறிந்திருக்கும் செயல்திறனே இவர்களின் இந்த வளர்ச்சிக்கு அடிப்படை.
வணிகத்தில் ஈடுபட்டு சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு இவர்கள் ஓர் உதாரணம் எனலாம்.