ஷா ஆலாம், நவம்பர் 4 – சிலாங்கூர், குவாலா லங்காட்-டில் உள்ள ஒரு துரித உணவகத்தின் மின் மெனு அட்டை கள்ள ஊடுருவல்காரர்களால் தாக்கப்பட்டு “ரத்தம், வெடிகுண்டு, தோட்டாக்கள், என மாற்றப்பட்டுள்ளதோடு “இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு பெருமைமிக்க ஆதரவாளர்களே” எனும் வாசகமும் இடம்பெற்றுள்ளது.
அந்த உணவகத்தின் மேலாளர் அக்டோபர் 31-ல் புகார் செய்ததன் அடிப்படையில் 26 வயது இரு உள்நாட்டவர்கள் கோலாலம்பூர் மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் ஹுசைன் ஒமர் கான் தெரிவித்துள்ளார்.
அந்த உணவகத்தின் பெயர் வெளியிடப்படாத நிலையில் சந்தேக நபர்களிடம் இருந்து கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 4 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காஸா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய நாட்டோடு தொடர்புடைய பொருட்களை வாங்குவதை நிறுத்தக் கோரி மலேசியாவில் பலர் வலியுறுத்தி வருகின்றனர். அதில் McDonald துரித உணவகமும் அடங்கும். இஸ்ரேலிய McDonald அங்குள்ள ராணுவத்தினருக்கு இலவச உணவை வழங்கியதை அடுத்து அவ்வுணகத்தைப் புறக்கணிப்புச் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.
இருப்பினும் இஸ்ரேலிய McDonald-லின் நிலைப்பாடு தங்களுடைய நிலைப்பாடு அல்ல என மலேசிய McDonald நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.