கோலாலம்பூர், பிப்ரவரி 7 – பேரரசர் சுல்தான் இப்ராஹிமிடமிருந்து, முழு மன்னிப்பை பெற, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் புதிய விண்ணப்பத்தை தாக்கல் செய்ய எண்ணம் கொண்டுள்ளார்.
அதனை உறுதிப்படுத்திய நஜிப்பின் வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹமட் ஷாப்பி அப்துல்லா, எனினும், அவரது உத்தரவுக்காக தமது தரப்பு காத்திருப்பதாக கூறியுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஷாப்பி அப்துல்லா அதனை தெரிவித்தார்.
2022-ஆம் ஆண்டு முதல் நஜிப் அனுபவித்து வரும் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையை, மன்னிப்பு வாரியம் ஆறாண்டாக குறைத்து விட்டதாக, இம்மாதம் இரண்டாம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
அதன் வாயிலாக, 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 23-ஆம் தேதியுடன் அவர் சிறைத் தண்டனை நிறைவடைந்து விடுவிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
அதோடு, நஜிப் செலுத்த வேண்டிய 21 கோடி அபராதமும், ஐந்து கோடியாக குறைக்கப்பட்டது.
“SRC International” நிறுவனத்துக்கு சொந்தமான நான்கு கோடியே 42 லட்சம் ரிங்கிட் பணத்தை, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மோசடி செய்ததாக ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த நஜிப்பிற்கு, 12 ஆண்டுகள் சிறையும், 21 கோடி ரிங்கிட் அபராதம் விதித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.