பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 2 – கடந்த ஞாயிற்றுக்கிழமை, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பட்டாசு வெடிக்க உள்ளுர் அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டதாக, நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனிலுள்ள, லெக்சிஸ் ஹைபிஸ்கஸ் (Lexis Hibiscus) தங்கும் விடுதி குழுமம் கூறியுள்ளது.
லெக்சிஸ் ஹைபிஸ்கஸ் போர்ட் டிக்சன் எனும் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றின் வாயிலாக அதனை தெரிவித்த அந்த தங்கும் விடுதி குழுமம், பணியில் இருந்த தொழிலாளர் ஒருவரின் உயிரை பறித்த அச்சம்பவம் தொடர்பில் வருத்தமும் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும், நிபுணத்துவ அடிப்படையில் மிகவும் கவனமாக பின்பற்றப்பட்டன. அதோடு, அரச மலேசிய போலீஸ் படை, தீயணைப்பு மீட்புப் படை ஆகிய தரப்புகளின் அனுமதியோடே அந்த பட்டாசு வெடிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும், அந்த நிகழ்வின் போது, தனது ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை, போலீசாரிடமே விட்டு விடுவதாக, அந்த அறிக்கையின் வாயிலாக,லெக்சிஸ் ஹைபிஸ்கஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
அனைத்து விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் அது கூறியுள்ளது.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, போர்ட் டிக்சன் லெக்சிஸ் ஹைபிஸ்கஸ் தங்கும் விடுதியின், கார் நிறுத்துமிட கட்டடத்தின் மேல் மாடியில் வைத்து வெடிக்கப்பட்ட பட்டாசு சிதறல்கள் பட்டு, அந்த தங்கும் விடுதியின் 40 வயது ஊழியர் ஒருவர் உயிரிழந்த வேளை; மற்றொருவர் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.