இந்தோனேசியா, நவம்பர் 2 – மத்திய ஜாவாவிலுள்ள, சுற்றுலா பூங்கா ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால், கீழே விழுந்து ஒருவர் பலியானதோடு, மூவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில், விசாரணைக்காக அப்பாலத்தில் உரிமையாளரும், சம்பந்தப்பட்ட பூங்கா நிர்வாகியுமான ஆடவர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
63 வயதான அந்நபர், சொந்தமாக வடிவமைத்து அந்த பாலத்தை நிர்மாணித்ததாக கூறப்படுகிறது.
அதனை பொதுமக்களுக்கு திறக்க அவர் முறையான அனுமதி எதையும் பெறவில்லை என்பதும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அந்த பாலம் நிர்மாணிக்கப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
அதனால், கவனக்குறைவாக செயல்பட்டு, நபர் ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்த அவ்வாடவருக்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படலாம் என கூறப்படுகிறது.
இவ்வேளையில், அவ்வாடவருக்கு சொந்தமான மேலும் இரு கண்ணாடி பாலங்கள், பாதுகாப்பு கருதி உடனடியாக பொதுமக்களுக்கு மூடப்பட்டடுள்ளன.