கோலாலம்பூர், ஜன 20 – இம்மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச திருவிழாவுக்கு இன்னும் 5 நாட்கள் எஞ்சியிருக்கும் இவ்வேளையில் இன்று முருகப் பெருமானின் தாய்க்கோயிலான பத்துமலை திருத்தலத்தில் விடியற்காலை அதிகமான பத்தர்கள் திரண்டு தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
தைப்பூச தினத்தன்று கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அதிகமான பக்தர்கள் இன்று முன்கூட்டியே பத்துமலை திருத்தலத்தில் திரண்டதை பார்க்க முடிந்தது.
ஈப்போ , பினாங்கு போன்ற இடங்களிலிருந்தும் பல பக்தர்கள் பத்துமலைக்கு வந்து பால்குடங்களையும் காவடிகளையும் ஏந்தி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
வழக்கத்தைவிட அதிகான சுற்றுப்பயணிகளும் இன்று பத்துமலைக்கு வருகை புரிந்தனர்.
பத்துமலை திருத்தலத்திற்கு வரும் பத்தர்களுக்கு வசதியாக இன்று காலையில் பலர் இலவச சிற்றுண்டி வசதிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஒரு சிறிய தைப்பூசம்போல் இன்று பத்துமலை காட்சியளித்ததோடு பல மைல் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது. நாளை வார இறுதிநாள் என்பதால் இன்று மாலையும் நாளை முழுவதிலும் மேலும் அதிகமான பக்தர்கள் பத்துமலை திருத்தலத்தில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.