கோலாலம்பூர், ஜன 31 – டான்ஸ்ரீ விருதைக் கொண்ட வர்த்தக பிரமுகர் ஒருவரின் பல மில்லியன் ரிங்கிட் வங்கிக் கணக்குகளை எம்.ஏ.சி.சி முடக்கம் செய்துள்ளது. அரசாங்கத்தின் வாகனங்கள் கொள்முதலுக்காக பெற்ற குத்தகை தொடர்பில் கடந்த ஆண்டு ஜூலை முதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்.ஏ.சி.சிக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்தன. அந்த 70 வயதுடைய வர்த்தகருக்கு சொந்தமான வீட்டிலும் நான்கு நிறுவனங்களிலும் மேற்கொள்ப்பட்ட சோதனையின்போது விசாரணைக்கு உதவுவதற்காக நிதி தொடர்பான ஆவணங்களை எம்.ஏ.சி.சி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
சில தனிப்பட்டவர்களுக்கு செய்யப்பட்ட பணப் பட்டுவாடாவை கண்டறிவதற்காக அந்த டான்ஸ்ரீ கட்டுப்பாட்டிலான 100க்கும் மேற்பட்ட தனிப்பட்ட மற்றும் நிறுவனங்களின் கணக்குகள் ஆராயப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ரிங்கிட் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளை எம்.ஏ.சி.சி முடக்கம் செய்துள்ளது. 2009 ஆம் ஆண்டின் எம்.ஏ.சி.சி சட்டத்தின் 17-ஆவது விதியின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதால் அந்த வர்த்தகரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சி.சியின் விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குனர் டத்தோஸ்ரீ ஹிஷாமுதீன் ஹாஷிம் தெரிவித்தார்.