ஷா ஆலாம், மார்ச் 29 – இணைய மோசடிக்காக வங்கிக் கணக்குகள் மற்றும் ATM அட்டைகளை வாங்கி விற்கும் மோசடி கும்பலைச் சேர்ந்த 3 இந்தியர்கள், ஒரு வெளிநாட்டவர் உள்ளிட்ட, 16 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
பணம் வசூலிப்பவர், RUNNER, இடைத்தரகர்கள் என வேலை செய்யும் அவர்கள், வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக வாடிக்கையாளர்களைத் தேடிப் பிடித்து வருவது கண்டறியப்பட்டது.
அக்கும்பலிடம் இருந்து 31 கைப்பேசிகள், பல்வேறு வங்கிகளின் 30 ATM அட்டைகள், PRINTER, மடிக்கணினி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
சிலாங்கூர் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை கடந்த வாரம் மேற்கொண்ட சோதனையில் கைதானவர்களில் வங்கியாளர்கள் இருவரும் அடங்குவர் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கூறினார்.
Mobile Deposit Specialist-டாக இரு உள்ளூர் வங்கிகளில் பணிபுரியும் அவ்விருவரும், runner-கள் தேடிப் பிடித்துக் கொண்டு வருவோரைப் பதிவுச் செய்து புதிதாக வங்கிக் கணக்குகளைத் திறந்து, எந்தவொரு சரிபார்ப்பும் இல்லாமல் வங்கி ATM அட்டைகளை வெளியிட்டு வந்திருக்கின்றனர்.
இதுவரை அத்தகைய 40 வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.
வேலையில் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள KPI அடைவுநிலையைப் பூர்த்திச் செய்வதற்காக, அப்படி எக்கச்சக்கமாக புதிய வாடிக்கையாளர்களை அவ்விருவரும் பதிவுச் செய்து வந்திருக்கின்றனர்.
அப்படி வரும் வாடிக்கையாளர்களுக்கு கமிஷனாக 500 ரிங்கிட் முதல் 1500 ரிங்கிட் வரை கொடுக்கப்படுகிறது.
அதே, SSM-மில் பதிய வைப்பதற்குக் கூட்டிச் சென்றால் இன்னும் கூடுதலாக அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.
பின்னர் அந்த வங்கிக் கணக்குகளை இணைய மோசடி கும்பலிடம் எட்டாயிரம் ரிங்கிட் வரையில் வாங்கிக் கொண்டு வாடகைக்கு விடுகின்றனர்.
அம்மோசடி கும்பலின் மூளையாகச் செயல்பட்ட மலாய் ஆடவர், 1959 குற்றச்செயல் தடுப்புச் சட்டத்தின் POCA கீழ் ஏற்கனவே 2021-ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்டவர் ஆவார் என போலீஸ் தெரிவிக்கிறது.