சென்னை, ஜன 9 – தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் 8 ஆண்டு கால கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, நேற்று முதல் பேருந்துகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பேருந்துகள் இயக்கம் படிப்படியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.30 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையாம். எனவே அவர்கள் வேலை நிறுத்த போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் ஸ்டிரைக் தொடங்கினாலும் அரசு பேருந்துங்கள் தொடர்ந்து செயல்படும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், பொங்கல் பண்டிகையை ஒட்டிய சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்புயையும் செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்டுள்ளார்.
ஜனவரி 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 19,484 பேருந்துகள் செயல்படவுள்ளன.