கோலாலம்பூர், ஜன 18 – 1990 ஆம் ஆண்டுகளின்போது மேற்கொள்ளப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பிரதமரின் மகனிடம் நேற்று வாக்குமூலம் பதிவு செய்ததை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி (MACC)-யின் விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். லஞ்ச ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் உள்ள அவரது சொத்து விவரங்களை எழுத்துப் பூர்வமாக அறிவிக்கும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார் என எம்.ஏ.சி.சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த தனிப்பட்ட நபருக்கு சொந்தமான நிறுவனம் அப்போதைய தனியார்மய கொள்கையின்கீழ் அரசு சார்பு நிறுவனத்தின் துணை நிறுவனத்தை கொள்முதல் செய்திருப்பது தொடர்பில் விசாரணை நடைபெற்றுவருவதாக எம்.ஏ.சி.சிக்கு அணுக்கமான தகவல்கள் இதற்கு முன் தெரிவித்திருந்தன. எனினும் ஒரு ஆண்டுக்குள் அரசு சார்பு நிறுவனத்திற்கு சொந்தமான அந்த நிறுவனம் விற்கப்பட்டதாகவும் அதன்வழி அந்த நபர் பல மில்லியன் ரிங்கிட்டை ஆதாயமாக பெற்றதாகவும் கூறப்பட்டது.