புத்ரா ஜெயா, நவ 23 -அதிகாரத்தின் முதல் ஒரு ஆண்டு காலத்தில் தமது அமைச்சரவை உறுப்பினர்கள் முடிந்தவரை சிறப்பாக சேவையாற்றுவதற்கு முயன்றதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இன்று தமது ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு ஆண்டு காலம் நிறைவை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான அன்வார் இதனை தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்ட அன்வாரிடம் அமைச்சரவை உறுப்பினர்களின் செயல்பாட்டில் திருப்தியடைந்துள்ளாரா என்பது குறித்து செய்தியாளர்கள் வினவினர்.
ஒட்டு மொத்த அமைச்சரவை குழு உறுப்பினர்கள் தங்களால் முடிந்தவரை சிறப்பாக பணியாற்ற முயன்றனர், இறைவன் அருளினால் நாங்கள் இன்னும் முன்னேற்றத்தை காண்போம் என அன்வார் தெரிவித்தார். 15ஆவது பொதுத் தேர்தலில் தொங்கும் நாடாளுமன்ற சூழ்நிலை ஏற்பட்ட ஐந்து நாட்களுக்குப் பின் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி அன்வார் பிரதமராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.