கோலாலம்பூர், டிச 18 – புதிதாக தங்களது கனவுக் காரை வாங்கிய மகிழ்ச்சி ஒரு மணி நேரம் கூட நிலைக்கவில்லை தம்பதியர் ஒருவருக்கு.
பூச்சோங்கில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளமே அதற்கு காரணம்.
அவர்கள் வாங்கிய கார் முழங்கால் அளவு ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், வாங்கிய போது மற்றும் வெள்ளத்தில் மிதக்கும் கார் என இரண்டு படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அந்த தம்பதியருக்கு ஏற்பட்ட வேதனையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார் அஸ்ஹாசுல் அஸ்ரி என்பவர்.
தனது சகோதரர் கார் விற்பனையாளர் என்பதால் அவரிடம் அந்த தம்பதியர் புதிய SUV ரக காரை வாங்கியிருந்தனர். அந்த தம்பதியரிடம் புதிய காரை மாலை 5 மணியளவில் சனிக்கிழமையன்று என் தம்பி ஒப்படைத்தார்.
ஆனால், துரதிஸ்டவசமாக மாலை 6 மணியளவில் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்தக் கார் வெள்ளத்தில் மிதந்தது என அவர் பதிவிட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று பெய்த மழையினால் பூச்சோங் IOI வர்த்தக பேரங்காடியில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டதால் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட கார்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.
அந்த பேரங்காடியின் வெளியே உள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்த அனைவரின் கார்களும் வெள்ளத்தினால் சேதமடைந்தன.