புத்ரா ஜெயா, நவ 7 – அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஏபெக் (Apec) மாநாட்டில் மலேசியா கலந்துகொள்ளும் என்பதோடு பாலஸ்தீன விவகாரத்தில் உறுதியான கடப்பாட்டை கொண்டிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். ஏபெக் மாநாட்டில் தாம் கலந்துகொள்ளக்கூடாது என சில தரப்பினர் தங்களது விருப்பங்களை தெரிவித்ததாகவும், இது தொடர்பாக உறுப்பு நாடுகளின் கருத்துக்களையும் பெற்றதாக அவர் கூறினார். ஆசிய நாடுகளின் அனைத்து தலைவர்கள் மற்றும் ஏபெக் உறுப்பினர்கள் ஏபெக் கூட்டத்தில் கலந்து கொள்வதால் அக்கூட்டத்தில் தாமும் கலந்துகொள்வதற்கு முடிவு செய்திருப்பதாக அன்வார் கூறினார் .
பிரதமர் என்ற முறையில் பாதுகாப்பு, அமைதி, அரச தந்திர உறவுகள் மற்றும் பொருளாதாரம் போன்ற மலேசிய நலன்களில் தாம் பொறுப்புணர்வோடு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதாக நிதியமைச்சருமான அன்வார் விவரித்தார். அதே வேளையில் பாலஸ்தீனர்கள் விவகாரத்தில் நீதி மற்றும் அவர்களது உரிமைகளுக்காக தொடர்ந்து நாங்கள் குரல் கொடுப்போம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என நிதி அமைச்சில் இன்று காலை நடைபெற்ற மாதந்திர கூட்டத்தில் உரையாற்றியபோது அன்வார் தெரிவித்தார்.