மோஸ்கோ, டிசம்பர்-28, தனக்குச் சொந்தமான Embraer 190 விமானம் கசக்ஸ்தானில் வெடித்துச் சிதறிய சம்பவத்துக்கு, ‘வெளிப்புறக் குறுக்கீடே’ காரணமென தொடக்கக் கட்ட விசாரணைத் தெரிவிப்பதாக Azerbaijan Airlines தெரிவித்துள்ளது.
இதையடுத்தே, இன்று முதல் ரஷ்யாவின் Sochi, Samara, Saratov உள்ளிட்ட பல நகரங்களுக்கான விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக டெலிகிராம் அறிக்கையில் அந்நிறுவனம் கூறியது.
‘தொழில்நுட்ப ரீதியிலான அந்த வெளிப்புறக் குறுக்கீடு’ பயணிகளின் பாதுகாப்புக்குத் தொடர் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.
எனவே முழு விசாரணை முடியும் வரை, மேற்கண்ட ரஷ்ய நகரங்களுக்கான விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருக்குமென அது விளக்கியது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணம் முழுமையாகத் திருப்பித் தரப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
யாரையும் குறிப்பிடாமல் ‘வெளியாரின் குறுக்கீடு’ என பொத்தாம் பொதுவாகப் பேசியிருப்பதால், விபத்துக்கான காரணம் தொடர்பான யூகங்கள் மேலும் வலுவடைந்துள்ளன.
67 பேருடன் கிறிஸ்மஸ் நாளன்று தலைநகர் பக்குவிலிருந்து புறப்பட்ட அந்த Azerbaijan Airlines விமானம், கசக்ஸ்தானின் அக்தாவ் விமான நிலையமருகே அவசரத் தரையிறக்கத்தின் போது விபத்துக்குள்ளானது.
அதில் 38 பேர் கொல்லப்பட்ட வேளை 29 பேர் உயிர் தப்பினர்.