ஜோகூர் பாரு, ஜன 17 – 1.23 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அதன் விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் மூவர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர். ஒரு தாய், அவரது மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இம்மாதம் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ஜொகூர் பாரு மற்றும் இஸ்கந்தர் புத்ரி வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 61 வயது மாது, அவரது 40 வயதுடைய மகன் மற்றும் அவரது 59 வயது மற்றொரு நண்பர் ஆகியோரை ஜோகூர் குற்றவியல் விசாரணைத்துறை கைது செய்தாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமாருல் ஸாமான் மாமட் தெரிவித்தார்.
அந்த மூவரும் கடந்த அக்டோபர் மாதம் முதல் உள்நாட்டு சந்தைக்காக போதைப் பொருள் விநியோகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அடுக்ககம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் உள்நாட்டு சந்தை விநியோகத்திற்கான போதைப் பொருளை மறைத்து வைத்திருந்ததோடு அவற்றை பொட்டலமிடும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்ட கும்பலிடமிருந்து போதை மாத்திரைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தும் சாதனங்களுடன் ஐந்து தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.