வாஷிங்டன், டிசம்பர் 26 – அமெரிக்கா, டெஸ்லா தொழிற்சாலையில், ஏற்கனவே பழுதடைந்த இரு மனித இயந்திரங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ரோபோவில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாரால், அது அங்கு பணியில் இருந்த பொறியியலாளர் ஒருவரை தாக்கியது.
அதனால் அந்நபர், இடது கையில் காயத்திற்கு இலக்கானதாக கூறப்படுகிறது.
ஆஸ்டினுக்கு அருகிலுள்ள, டெஸ்லாவின் டெக்சாஸ் ஜிகாபாக்டரி தொழிற்சாலையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
ரோபோ தாக்கி பொறியியளாலர் இரத்த காயத்திற்கு இலக்கானதை கண்ட சக பணியாளர்கள், உடனடியாக உதவி கோரி அவசர சேவை ‘பட்டனை’ முடுக்கிவிட்டனர்.
எனினும், சம்பந்தப்பட்ட பொறியியலாளர் மருத்துவ விடுப்பில் செல்ல தேவையில்லை என டெஸ்லா கூறியதாக, பிரிட்டன் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொழிற்சாலையில், ரோபோக்களை உட்படுத்திய இதர விபத்துகள் அல்லது சம்பவங்கள் குறித்து டெஸ்லா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையாக தெரிவிப்பதில்லை என்றாலும், பொறியியலாளர் காயமடைந்த அச்சம்பவம் வேலையிடங்களில் தானியங்கி ரோபோக்களின் பயன்பாடு தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அமேசான் தானியங்கி பொருட்கள் விநியோகம், மனித இயந்திரங்கள் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது, ஓட்டுனர் இன்றி தான்-இயக்க முறையில் செயல்படும் வாகனங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.