அரசாங்க செலவினங்கள் கண்காணிக்கப்பட்டு முக்கியமானவற்றுக்கு மட்டுமே பணம் செலவிடப்படுவதை தாம் உறுதிப்படுத்தவிருப்பதாக மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பணப்பற்று வரவை அதிகரிப்பதில் அரசாங்கம் வெற்றி பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவசியம் தேவைப்படக்கூடிய விவகாரங்களுக்கு மட்டுமே அரசாங்க பணம் செலவிடப்பட வேண்டும் என பேரரசர் கேட்டுக்கொண்டார். பொதுமக்களின் பணம் விரயமாகுவது மற்றும் நிதி முறைகேட்டை அரசாங்கம் தடுக்க வேண்டும் என இன்று 15 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணைக்கான முதலாவது கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்து உரையாற்றியபோது பேரரசர் தெரிவித்தார்.
மலேசியாவின் அதிகரித்துவரும் கடன் குறித்தும் Sultan Ibrahim கவலை தெரிவித்தார். இதனால் 1998ஆம் ஆண்டு முதல் கூட்டரசு அரசாங்கம் நிதி பற்றாக்குறை நிலையை எதிர்நோக்கி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த சுமையை நமது பேரப்பிள்ளைகள் எதிர்நோக்க வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நிதியை மிச்சப்படுத்துவது மற்றும் இலக்கை கொண்ட உதவித் தொகையை மட்டுமே அமல்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் நிதி நிலைமை பலவீனமாக இருந்தால் மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்துவதில் முட்டுக்கட்டை ஏற்படும் என்பதோடு அதனால் நாடு துரிய பொருளாதார வளர்ச்சி அடைவதிலும் பின்னடைவு ஏற்படலாம் என அவர் நினைவுறுத்தினார்.