லங்காவி, பிப் 26 – லங்காவியில் நீர் நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து வருவதால் அங்குள்ள வர்த்தகர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகள் மற்றும் கடைகளில் இருக்கும் நீர் குழாய்களில் தண்ணீர் விநியோகம் கிடைக்காமல் இருப்பது பெரும் ஏமாற்றமாக இருப்பதாக சிகையலங்காரம், தங்கும் விடுதி, சலவை போன்ற தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமின்றி குடும்ப மாதர்களும் பிரச்னைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
எல் நினோ வறட்சிக் காலம் தொடரும் என்பதால் லங்காவியில் நீர் நெருக்கடி மோசம் அடையும் என கடந்த மாதம் Syarikat Air Darul Aman Sdn Bhd லங்காவி மக்களுக்கு நினைவுறுத்தியிருந்தது. பெர்லீஸ் பெருநிலத்திலிருந்து லங்காவி தீவுக்கு கடல் வழியாக செல்லும் நீர்குழாய்களில் ஏற்பட்ட கசிவு காரணமாக லங்காவியில் உள்ள நீர்க் குழாய்களில் அழுத்தம் குறைந்துள்ளது.
சில வாரங்களாக மழை இல்லாமல் EL Nino வறட்சியினால் வடகிழக்கு வட்டாரம் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வறட்சி மற்றும் கடலுக்கு அடியில் செல்லும் நீர்க்குழாய் கசிவு இப்போது லங்காவியில் ஏற்பட்டுள்ள நீர் விநியோக தடைக்கு பெரும் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடலுக்கு அடியில் உள்ள நீர்க்குழாய்களை எல்லா நேரத்திலும் பழுதுபார்க்க முடியாது. அதிக அலைகள் இல்லாத காலக்கட்டத்தில் மட்டுமே நீர்க்குழாய்களை பழுதுபார்க்க முடியும். 37 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட நீர்குழாயில் 5 கிலோ மீட்டர் பகுதியில் 47 இடங்களில் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட நீரில் 45 விழுக்காடு விரயமாகுவதால் லங்காவி தீவில் நீர் விநியோகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.