கோலாலம்பூர், ஜன 18 – பங்சார், ஜாலான் கெரிஞ்சியில் இணைய சூதாட்ட மையத்தில் சோதனை நடத்திய குடிநுழைவு அதிகாரிகள் 14 சீனப் பிரஜைகள் உட்பட 17 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆடவர்களில் உள்நாட்டைச் சேர்ந்த மூவரும் அடங்குவர் என குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார். கடந்த சில மாத காலமாக பொதுமக்கள் மற்றும் வேவுத்துறையின் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இரவு 11 மணியளவில் குடிநுழைவுத்துறை சோதனை நடத்தியது. அந்த சூதாட்ட மையத்தில் உள்ளவர்கள் ஒத்துழைப்பு வழங்கத் தவறியதால் அந்த மையத்தின் பூட்டை உடைத்து குடிநுழைவு அதிகாரிகள் உள்ளே புகுந்ததாக ருஸ்லின் கூறினார்.
அங்கிருந்த 14 சீன பிரஜைகளும் பிரேசில் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அடையாள ஆவணங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. இதனிடையே அந்த மையத்தை பராமரித்து வந்ததாக நம்பப்படும் உள்நாட்டைச் சேர்ந்த மூவரும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர். 16 மடிக்கணினிகள், 10 மானிட்டர்கள், 45 கைதொலைபேசிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.